கப்பல் விபத்துகள்: விசேட தெரிவுக்குழு நியமனம்

கப்பல் விபத்துகளால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழு

by Staff Writer 06-06-2023 | 10:57 AM

Colombo (News 1st) X-Press Pearl மற்றும் MT New Diamond கப்பல் விபத்துகளினால் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரமேஷ் பத்திரன தலையிலான 14 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டதாக இந்த தெரிவுக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று(06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, X-Press Pearl கப்பலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு நட்டஈடு பெற்றுக்கொள்வதற்காக சிங்கப்பூர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சமரசத்திற்கு கொண்டுவருவது தொடர்பாக கலந்துரையாட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அனுமதிக்கமைய இந்த குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

நேற்று(05) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டார்.

இந்த குழு சிங்கப்பூர் நோக்கி பயணிக்கவுள்ளதுடன், அங்கு கப்பல் நிறுவனம் மற்றும் கப்பல் காப்புறுதி நிறுவனம் ஆகியவற்றுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சட்ட மா அதிபர் தலைமையில் இந்த குழு செயற்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மற்றும் அவுஸ்திரேலிய சட்ட ஆலோசகர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.