பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது

by Staff Writer 05-06-2023 | 6:39 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணம் - மருதங்கேணியில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மக்கள் சந்திப்பு இடம்பெற்ற பகுதியை அண்மித்து சாதாரண தரப் பரீட்சை மத்திய நிலையம் அமைந்திருந்த நிலையில் மக்கள் சந்திப்பை நடத்த வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்திய சந்தர்ப்பத்திலேயே வாக்குவாதம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வௌ்ளிக்கிழமை யாழ்.மருதங்கேணி பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணித்தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்ரன் இன்று(05) கைது செய்யப்பட்டார்.

கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று(05) காலை ஆஜர்ப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் சந்திப்பை அனுமதியற்ற முறையில் ஏற்பாடு செய்ததாகவும் பரீட்சை மத்திய நிலையத்திற்கு அருகில் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸாருக்கு கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் சற்குணதேவி ஜெகதீஸ்வரனுக்கு எதிராக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.