சீமெந்து மூடையின் விலை குறைவடையும்

எதிர்வரும் இரண்டு நாட்களில் சீமெந்து மூடையின் விலை குறைவடையும்: வர்த்தக அமைச்சர்

by Bella Dalima 01-06-2023 | 5:04 PM

Colombo (News 1st) எதிர்வரும் இரண்டு நாட்களில் சீமெந்து மூடையின் விலை 300 முதல் 500 ரூபா வரை குறைவடையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து  சீமெந்து உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடியதாக இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த கலந்துரையாடலில் சீமெந்து உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல் குறித்தும் கலந்துரையாடியதாக அவர் கூறினார். 

ஏனைய கட்டுமான பொருட்களின் விலையையும் குறைக்கும் வகையில், இறக்குமதியாளர்களுடனும் உற்பத்தியாளர்களுடனும் கலந்துரையாடவுள்ளதாக வர்த்தக அமைச்சர் கூறினார்.

இரும்பு உற்பத்தியாளர்களுடன் இன்று கலந்துரையாடியதுடன், நாளைய தினம் டைல்ஸ், அலுமினியம், வயர் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், அதன் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.