ஆரையம்பதியில் அரச வங்கியில் கொள்ளை முயற்சி; சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

by Bella Dalima 01-06-2023 | 2:54 PM

Colombo (News 1st) மட்டக்களப்பு - ஆரையம்பதியில் உள்ள அரச வங்கியொன்றின் கிளை அடையாளம் தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளது.

இன்று (01) அதிகாலை 03.13 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர்கள், வங்கியின் கதவை உடைத்துள்ளதுடன், கண்ணாடியையும் உடைத்து வங்கிக்குள் நுழைந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

வங்கியிலிருந்த பாதுகாப்பு பெட்டகத்தை சந்கேநபர்கள் உடைக்க முற்படும் போது, அங்கு பொருத்தப்பட்டிருந்த சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கை சமிக்ஞை, வங்கி முகாமையாளரின் யைடக்க தொலைபேசிக்கும் பொலிஸ் நிலையத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.

இதனால், சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்டதும் வங்கி முகாமையாளர், பொலிஸாருக்கு அறிவித்து பொலிஸ் உத்தியோகத்தருடன் வங்கிக்கு வருகை தந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

வங்கியிலிருந்து எந்த பொருளும் கொள்ளையிடப்படவில்லை என்ற போதிலும், வங்கி பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன், பாதுகாப்பு பெட்டகத்திற்கும் சேதமேற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பணப்பரிவர்தனை தன்னியக்க இயந்திரமும் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவ இடத்திலிருந்து சந்தேகநபர்களின் கூரிய ஆயுதங்கள் மற்றும் பை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.