தொலைக்காட்சிகளை தரப்படுத்தும் முறைமை பிழையானது - ஊடக அமைச்சின் செயலாளர்

by Staff Writer 31-05-2023 | 11:49 AM

Colombo (News 1st) தொலைக்காட்சி அலைவரிசைகள் தரப்படுத்தப்படும் முறைமை (Rating) சரியானதாக இல்லை என வௌிக்கொணரப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, முறையற்ற விதத்திலும் பக்கச்சார்பான வகையிலும் இடம்பெறுவதாக வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனூஷ பல்பிட்ட தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்கு கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அண்மையில் கூடியது.

தரப்படுத்தலைக் கணக்கிடுவதற்கு எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட சுமார் 400 தொலைக்காட்சிகளில் பொருத்தப்பட்டுள்ள உபகரணம் மூலம் தரவுகள் பெறப்படுவதாக அனூஷ பல்பிட்ட தெரிவித்தார். 

இவற்றில் பிரதான ஊடக நிறுவனங்கள் அந்த தரப்படுத்தலைக் கணக்கிடும் நிறுவனங்களுக்கு பணம் செலுத்தி, இந்த உபகரணம் பொருத்தப்பட்டுள்ள சுமார் 300 தொலைக்காட்சிகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இதனால் பெறப்படும் தரவுகள் சரியானதாக இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தனியார் ஊடகங்களை விட அரச ஊடகங்களுக்கு பொறுப்புகள் காணப்படுவதாகவும் அலைவரிசை தரப்படுத்தலில் முன்னோக்கி வரவேண்டும் என்ற நோக்கில் மாத்திரம் செயற்பட முடியாது எனவும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை, ஊடகவியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவது தொடர்பில் கோபா குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மிக சுறுசுறுப்பாக செய்திகளை வழங்குவதில் பங்களிக்கும் ஊடகவியலாளர்களை அங்கீகரிக்கும் முறைமை ஒன்றை தயாரிப்பது குறித்தும் இந்த குழுவில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், வெளிவிவகார அமைச்சின் ஊடாக உள்நாட்டு தகவல்கள் வெளிநாடுகளுக்கும் வெளிநாட்டு தகவல்களை உள்நாட்டு மக்களுக்கும் வழங்குவதற்கு முறையான வேலைத்திட்டம் அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.