மிகை தங்கியிருப்பிற்கான தண்டப்பணம் குறைப்பு

விசா காலம் நிறைவடைந்த வெளிநாட்டவர்களிடம் மிகை தங்கியிருப்பு காலத்திற்கு அறவிடப்படும் தண்டப்பணத்தை குறைக்க நடவடிக்கை

by Bella Dalima 30-05-2023 | 3:15 PM

Colombo (News 1st) விசா காலம் நிறைவடைந்த வெளிநாட்டவர்களிடம் இருந்து மிகை தங்கியிருப்பு காலத்திற்கு அறவிடப்படும் தண்டப்பணத்தை குறைக்கும் ஒழுங்கு விதிகளுக்கு அமைச்சுசார் ஆலோசனைக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விசா கட்டணத்திற்கு மேலதிகமாக மிகை தங்கியிருப்பு காலத்திற்காக இதுவரை 500 அமெரிக்க டொலர் தண்டப்பணம் அறவிடப்பட்டது.

இந்த அபராதத் தொகையை திருத்துவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த ஒழுங்கு விதிகள் மூலம் விசா காலப்பகுதியை நீடித்துக்கொள்ளாமல், செல்லுபடியாகும் விசா காலம் முடிவடைந்து 07 நாட்கள் அல்லது அதற்கு குறைந்த காலத்தில் வெளியேறும் போது அதற்காக தண்டப்பணத்தை அறவிடாமல் இருப்பதற்கும், மிகை தங்கியிருப்பு காலம் 7 நாட்களுக்கு மேல் மற்றும் 14 நாட்கள் அல்லது அதற்கு குறைவான காலப் பகுதிக்கு 250 அமெரிக்க டொலர் தண்டப்பணத்தை அறவிடுவதற்கும், மிகை தங்கியிருப்புக் காலம் 14 நாட்களை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் 500 அமெரிக்க டொலர் தண்டப்பணத்தை அறவிடுவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

சுற்றுலாத்துறையின் மேம்பாடு, முதலீட்டாளர்களை கவர்தல் மற்றும் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கும் மேற்குறிப்பிட்ட தண்டப்பணத்தை செலுத்தவேண்டி ஏற்படுவதால், பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஏனைய செய்திகள்