ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக நினைவு முத்திரை, முதல் நாள் கடித உறை என்பன வௌியீடு

by Staff Writer 29-05-2023 | 9:14 PM

Colombo (News 1st) முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக விசேட நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் கடித உறை என்பன ஜனாதிபதி தலைமையில் இன்று(29) ஜனாதிபதி அலுவலகத்தில் வெளியிடப்பட்டன.

ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சரான பந்துல குணவர்தனவினால் நினைவு முத்திரை மற்றும்  முதல் நாள் கடித உறை என்பன ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. 

பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் ஆறுமுகன் தொண்டமானின் மனைவி ராஜலக்‌ஷ்மி தொண்டமான் ஆகியோருக்கு நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் கடித உறை என்பன வழங்கப்பட்டன.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.