சர்வதேச சிலம்ப போட்டியில் பதக்கங்களை சுவீகரித்தவர்கள் நுவரெலியாவில் கௌரவிப்பு

by Bella Dalima 27-05-2023 | 7:06 PM

Colombo (News 1st) சர்வதேச சிலம்ப போட்டியில் பதக்கங்களை சுவீகரித்த சிலம்ப வீர, வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நுவரெலியா - கொட்டகலையில் இன்று (27) நடைபெற்றது. 

இந்தியாவின் பெங்களூரில் கடந்த 12 முதல் 14 ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் இலங்கை, இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளை சேர்ந்த வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர். 

இதன்போது, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 19 சிலம்ப வீர, வீராங்கனைகள் பங்குபற்றியதில், தங்கம், வௌ்ளி, வெண்கலப் பதக்கம் உள்ளிட்ட 69 பதக்கங்களை சுவீகரித்திருந்தனர்.

ஒற்றை சிலம்பம், இரட்டை சிலம்பம், சுருள் வாள், வேல் கொம்பு, மான் கொம்பு உள்ளிட்ட சிலம்பக் கலைகளில் வீர, வீராங்கனைகள் திறமையை வெளிப்படுத்தியதுடன், 2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச சிலம்ப போட்டியில் இலங்கை இரண்டாமிடத்தை  பெற்றிருந்தது

இந்த நிகழ்வு இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

 2000 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலம்பக் கலை தமிழர்களின் தற்காப்பு கலையாக திகழ்வதுடன், பாரதத்தின் தமிழகத்தில் தோற்றம் பெற்றதாகக் கூறப்படுகின்றது.