.webp)
அனைத்து அரச நிறுவனங்களும் இன்று(26) முதல் வெள்ளிக்கிழமைகள் தோறும் டெங்கு ஒழிப்புக்காக 2 மணித்தியாலங்களை ஒதுக்க வேண்டும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
நிறுவனங்களின் தலைவர்களுக்கு இதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக கூறுகிறார்.
அதற்கான சுற்றறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, டெங்கு அதி அபாய வலயங்களாக காணப்படும் பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளுக்கான இணைப்பு செயற்பாடுகளுக்காக மாகாண ஆளுநர்களின் விசேட இணைப்புச் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் நளீன் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
சில பகுதிகளில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாவதுடன் சில பகுதிகளில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நுளம்பு பெருக்கத்தை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை அனைத்து பகுதிகளிலும் உரியவகையில் முன்னெடுக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் நளீன் ஆரியரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 37,209 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் 18,420 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 8371 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் 2523 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1561 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 1508 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 61 சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவு தொடர்ந்தும் டெங்கு அதி அபாய வலயங்களாக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.