தினேஷ் ஷாப்டரின் உடல் தோண்டியெடுப்பு

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடல் தோண்டியெடுப்பு

by Staff Writer 25-05-2023 | 11:42 AM

Colombo (News 1st) பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடல் இன்று(25) தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபரின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் விசேட சட்ட மருத்துவ அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சடலம் தோண்டி எடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திரா ஜயசூரியவின் மேற்பார்வையில் கீழ் இன்று(25) காலை சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

பொரளை பொது மயானத்தில் தொழிலதிபர் தினேஷ் சாப்டரின் சடலம் புதைக்கப்பட்டிருந்த இடத்திற்கு பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொரளை பொது மயானத்தில் தனது காரில் கை கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் மீட்கப்பட்டார்.

பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அன்றிரவு தினேஷ் ஷாப்டர் உயிரிழந்தார்.

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனித கொலை மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.