அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி Y.L.S. ஹமீட் காலமானார்

by Bella Dalima 25-05-2023 | 5:20 PM

Colombo (News 1st) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி Y.L.S. ஹமீட்  சுகவீனம் காரணமாக தனது 61 ஆவது வயதில் கொழும்பில் இன்று (25)  காலமானார்.

1962 ஆம் ஆண்டு கல்முனையில் பிறந்த அன்னார், 1986 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் M.H.M. அஷ்ரப்புடன் தனது அரசியல் பணத்தை ஆரம்பித்து, அவரின் இணைப்புச் செயலாளராகவும் செயற்பட்டார்.

சிறிது காலத்தின் பின்னர் Y.L.S.ஹமீட் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாப உறுப்பினராக இருந்து கட்சியின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பு செய்துள்ளார்.

நீண்ட கால அரசியல் முதிர்ச்சியும் சமூக அரசியல் பற்றிய பரந்துபட்ட கருத்துருவையும் கொண்ட Y.L.S.ஹமீட், ஒரு சட்ட முதுமாணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு சிறந்த ஆங்கில ஆசிரியாக திகழ்ந்த Y.L.S.ஹமீட் கல்வி வளர்ச்சிக்காகவும் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.

அன்னாரின் ஜனாஸா இன்று இஷாத் தொழுகையின் பின்னர் தெஹிவளை ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி Y.L.S.ஹமீடின்  மறைவு பெரும் கவலையளிப்பதாக அக்கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூலகர்த்தாக்களில் ஒருவராக இருந்ததாகவும், தனது நிலைப்பாட்டில் உள்ள நியாயத்தை நிரூபிக்கும் பாங்கு அவரிடம் இருந்ததாகவும் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.