சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இடமளிக்க மாட்டேன்

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இடமளிக்க மாட்டேன்: ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 01-04-2023 | 6:35 PM

Colombo (News 1st) தான் பதவியில் இருக்கும் வரை சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

அனுராதபுரத்தில் உள்ள விமானப்படை முகாமில் இன்று முப்படை மற்றும் பொலிஸாரிடையே கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

நாட்டில் ஏற்றுமதியை விட இறக்குமதியே அதிகளவில் காணப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, தொடர்ச்சியாக கடனைப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதத்தினை விட போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் இதற்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டு வருவதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொலிஸார் மாத்திரமல்லாது, முப்படைகளின் உதவியுடன் போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.

ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இடமளிக்க போவதில்லை என கூறிய அவர்,  அனுமதியுடன் அமைதிவழி கூட்டங்களை நடத்த முடியும் எனவும் தெரிவித்தார்.