கம்மெத்த ஆய்வு அறிக்கை களனி பல்கலைக்கழகத்திடம் கையளிப்பு

by Bella Dalima 31-03-2023 | 9:18 PM

Colombo (News 1st) கம்மெத்த ஆய்வு அறிக்கை களனி பல்கலைக்கழகத்திற்கு இன்று (31) வழங்கப்பட்டது.

ஐந்து வருடங்களாக இல்லங்கள் தோறும் சென்று, பேராதெனிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட கம்மெத்த ஆய்வறிக்கை களனி பல்கலைக்கழகத்திற்கு இன்று வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி டி சில்வா, சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் M.M.குணதிலக்க, புவியியல் ஆய்வுத்துறை தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் லால் மர்வின் தர்மசிறி, சமூக விஞ்ஞான பீடத்தின் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் A.G.அமரசிங்க தொடர்பாடல் மற்றும் ஊடகப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சமன் ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

கம்மெத்தவின் தலைவர்  ஷெவான் டேனியல், வசந்த மாசிங்ககே, கம்மெத்த பொதுச்செயலாளர் பிரசன்ன அத்துகோரள, கம்மெத்தவின் தேசிய அமைப்பாளர், கெனத் வீரக்கொடி உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு சென்று, சேகரித்த தரவுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 5 ஆய்வு அறிக்கைகள், புகழ்பெற்ற முன்னிலை பல்கலைக்கழகங்களான இங்கிலாந்தின் Oxford, அமெரிக்காவின் Brown உள்ளிட்ட பல பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. 

இந்த ஆய்வு அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, இதனை விரிவாக ஆராய்வதற்கு களனி பல்கலைக்கழகம் எதிர்பார்க்கின்றது.

குறித்த ஆய்வு அறிக்கைகள் வழங்கப்பட்டமைக்கு இணையாக, எதிர்காலத்தில் களனி பல்கலைக்கழகம் மற்றும் கம்மெத்த ஒத்துழைப்புடன் செயற்படும் விதம் குறித்தும் இன்று கலந்துரையாடப்பட்டது.