விசாரணையை துரிதப்படுத்துமாறு உத்தரவு

அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ மூட்டியமை தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு உத்தரவு

by Bella Dalima 28-03-2023 | 5:09 PM

Colombo (News 1st) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற அலுவலகக் கட்டடத் தொகுதிக்கு தீ மூட்டியமை தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்கரைப்பற்று நீதவான் M.H.M. ஹம்சா முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற, அலுவலகக் கட்டடத் தொகுதிக்கு  ஒப்பந்த அடிப்படையில் தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம்  திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதியில் தீ பரவியிருந்தது. இத்தீயினால் நீதிமன்றத்தின் வழக்குகளுடன் தொடர்புடைய அதிகளவிலான ஆவணங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்றை சேர்ந்த  24 வயதான இருவரும், 18 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் இருவர், அக்கரைப்பற்று பெரிய நீலாவணை சுனாமி வீட்டுத்திட்டத்தில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில்  ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒருவரிடம் பணம் பெற்றுக்கொண்டு, நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.