நிதியமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் செல்ல தீர்மானம்

தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் நிதி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளன

by Staff Writer 25-03-2023 | 3:59 PM

Colombo (News 1st) உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணம் விடுவிக்கப்படாமை தொடர்பில், நிதி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்க தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

எதிர்வரும் சில தினங்களில் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திடம் விடயங்களை முன்வைக்கவுள்ளதாக  PAFFREL அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய, நிதி விடுவிக்கப்படவில்லை என்பதுடன், அது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பிய கடிதத்திற்கும் நிதி அமைச்சிடமிருந்து எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என அவர் கூறினார்.

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதிலும் நிதியை விடுவிக்காதிருப்பது,  நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

இதேவேளை, உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமை தொடர்பில் சர்வதேச சமூகத்தை தௌிவுபடுத்தியுள்ளதாக 
ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்று  பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க குறிப்பிட்டார்.

தேர்தலை நடத்துவது குறித்து பல அரசியல் கட்சிகளின் ஆர்வமும் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிவதாக அவர் கூறினார்.

நேற்றும், நேற்று முன்தினமும் சர்வதேச சமூகத்தை தௌிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.