ஏழு நிறுவனங்களில் உள்ள அரச பங்குகளை விற்பனை செய்ய தீர்மானம்

by Bella Dalima 23-03-2023 | 4:29 PM

Colombo (News 1st) ஏழு நிறுவனங்களில் உள்ள அரச பங்குகளை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, SriLankan Catering உள்ளிட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், Telecom, ஸ்ரீலங்கா காப்புறுதி கூட்டுத்தாபனம், Grand Hyatt Colombo, ஹில்டன் ஹோட்டல் கொழும்பு, லிட்ரோ எரிவாயு  நிறுவனம், Lanka Hospital கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் அரச பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு துரித வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, கட்டமைப்பு மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தும் செயன்முறையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, பல ஆண்டுகளாக பொருளாதாரத்திற்கு சுமையாகக் காணப்படும் துறைகள் அடையாளம் காணப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான முயற்சியாண்மைகளை மறுசீரமைக்கும் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில், நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகளுக்கான அமைச்சின் ஊடாக மறுசீரமைப்புகள் நடைமுறைப்படுத்தப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், முயற்சியாண்மைகளை இலாபமீட்டச் செய்யும் கொள்கை ரீதியான யோசனைக்கு கடந்த 13 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.