இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு உடனடி தீர்வு கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டப் பேரணி

by Bella Dalima 23-03-2023 | 3:03 PM

Colombo (News 1st) இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு உடனடியாக தீர்வு கோரி மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது.

மன்னார் பொது விளையாட்டு அரங்கில் இருந்து பேரணியாக சென்ற மீனவர்கள், வைத்தியசாலை பிரதான வீதி ஊடாக நகர்வலம் சென்று மாவட்ட செயலகத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்ட மீனவ அமைப்புகள், சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்த  இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் வட மாகாணத்திலுள்ள அனைத்து மீனவ அமைப்புகளும் இணைந்துகொண்டன.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் ஏற்படும் இழப்புகளுக்கு தீர்வு வழங்குமாறு இதன்போது மீனவர்கள் வலியுறுத்தினர்.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மாவட்ட  அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றினையும் கையளித்தனர்.

இதனிடையே, மீனவர்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன், மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை என நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.