வங்கி பிணை கட்டணம் அதிகரிப்பு

வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் அனுமதிப்பத்திர விநியோகத்திற்கான வங்கி பிணை கட்டணம் அதிகரிப்பு

by Staff Writer 21-03-2023 | 6:32 PM

Colombo (News 1st) வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கான அனுமதிப்பத்திர விநியோகத்திற்காக சமர்ப்பிக்கப்படும் வங்கி பிணைக்கான கட்டணம் 7,50,000 ரூபாவில் இருந்து 3 மில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் வருடத்திற்கு பின்னர் அதனை 5 மில்லியன் ரூபா வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு  பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகவர் நிலையங்களூடாக வௌிநாடுகளுக்கு செல்வோருக்கான ஒப்பந்தத்திற்கு அமைய, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் செலுத்தப்படாவிடின், அது குறித்து கிடைக்கும் முறைப்பாட்டிற்கு அமைய சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கும், மேலதிக கட்டணங்களை அறவிடவும் தேவையான பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான கட்டணங்களை குறித்த முகவர் நிலையங்கள் செலுத்தாவிடின், முகவர் நிலையங்களால் சமர்ப்பிக்கப்படும் வங்கி பிணை கட்டணத்திலிருந்து அதனை சட்ட ரீதியாக அறவிட முடியும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, முகவர் நிலையங்களுக்கு கடுமையான ஒழுங்குபடுத்தல்களை அமுல்படுத்தவும் எதிர்பார்ப்பதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.