Colombo (News 1st) ஶ்ரீ லங்கா டெலிகொம், லங்கா ஹொஸ்பிட்டல்(Lanka Hospital) ஆகிய நிறுவனங்கள் வசமுள்ள அரசின் பங்குகளை விற்பனை செய்வதற்கு கொள்கை அளவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த இரு நிறுவனங்களும் இன்று(20) கொழும்பு பங்குச் சந்தைக்கு அறிவித்துள்ளன.
பணிப்பாளர் சபை மற்றும் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைவாக இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக டெலிகொம் நிறுவத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியின் கையொப்பத்துடன் கொழும்பு பங்குச் சந்தைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசியக் கொள்கை அமைச்சின் கீழுள்ள அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு பிரிவினூடாக குறித்த பங்குகளின் விற்பனை தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பிரதான பங்கு உரிமையாளரான அரசின் பங்கு விற்பனையுடன் தொடர்புடைய கொள்கை ரீதியான தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக Lanka Hospital நிறுவனத்தின் செயலாளர் பங்குச் சந்தைக்கு அறிவித்துள்ளார்.