தேர்தல் தாமதமடையக்கூடும் என்கிறார் சாந்த பண்டார

தேர்தல் தாமதமடையக்கூடும் என்கிறார் சாந்த பண்டார

by Bella Dalima 16-03-2023 | 6:26 PM

Colombo (News 1st) தேர்தல் தாமதமடையக்கூடும் என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான பணம் திறைசேரியிடமிருந்து இதுவரை கிடைக்காமையே அதற்குக் காரணம் என அவர் கூறினார்.

திறைசேரியிடமிருந்து குறைந்தபட்சம் 300 மில்லியன் ரூபா பணம் வழங்கப்படுமாயின், அச்சிடும் பணிகளை ஆரம்பிக்க முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார குறிப்பிட்டார்.

பணம் மற்றும் பாதுகாப்பை பெற்றுத்தருமாறு நிதி அமைச்சிற்கும், பொலிஸ் திணைக்களத்திற்கும் அரச அச்சகர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த கோரிக்கைக்கு பொலிஸ் திணைக்களத்திடமிருந்து உரிய பதில் கிடைத்துள்ள போதிலும், பணத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் நிதி அமைச்சிடமிருந்து எவ்வித பதில்களும் இதுவரை கிடைக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார குறிப்பிட்டார். 

இந்நிலையில், முன்னுரிமை அடிப்படையில்  உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியை ஒதுக்குவது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என தாம் நம்புவதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார சுட்டிக்காட்டினார்.