இலங்கையின் ஜனரஞ்சக பெண்ணாக ஷலனி தாரகா தெரிவு

by Bella Dalima 16-03-2023 | 6:50 PM

Colombo (News 1st) இலங்கையின் ஜனரஞ்சக பெண்ணாக ஷலனி தாரகா தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

நியூஸ்ஃபெஸ்ட் - NDB உடன் இணைந்து முன்னெடுக்கும் ஸ்ரீலங்கா வனிதாபிமான 2022 விருது வழங்கல் விழா, இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் இன்று மாலை மிக கோலாகலமாக நடைபெற்றது. 

இதன்போது, பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்த பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

நாட்டிற்கு பெருமை சேர்க்கும் பெண்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் நோக்கில் 2020 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி வனிதாபிமான நிகழ்ச்சி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இம்முறை  ஜனரஞ்சக பெண் யார் என்பதை தெரிவு செய்வதற்கான போட்டியில் ஐந்து பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

நடிகை ஷலனி தாரகா,  நடிகை துஷேனி மயுரங்கி, பாடகி காஞ்சனா அநுராதா,  நடிகை ருவங்கி ரத்நாயக்க, கிரிக்கெட் வீராங்கனை சமரி அத்தபத்து ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.  

இவர்களில் இலங்கையின் ஜனரஞ்சக பெண்ணாக ஷலனி தாரகா தெரிவு செய்யப்பட்டார். 

கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் நிறைவேற்று அதிகாரிகள், குழுமம் பணிப்பாளர்கள், பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். 

இலங்கை வரலாற்றில் பெண்களை ஊக்கப்படுத்தும் இந்த பிரம்மாண்ட நிகழ்வில் நியூஸ்ஃபெஸ்ட்டுடன் NDB வங்கி இணைந்து கொண்டது.