பல பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

உணவுப் பொருட்கள், தகவல் தொடர்பாடல் சேவைகள், தொழில்துறை மற்றும் உற்பத்தி சேவைகளின் விலைகள் அதிகரிப்பு

by Bella Dalima 17-02-2023 | 4:24 PM

Colombo (News 1st) மின் கட்டண அதிகரிப்பிற்கு அமைய, நேற்றிரவு முதல் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சோறு, கொத்து, Fried Rice ஆகியவற்றின் விலை 10 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். 

எனினும், ஏனைய சிற்றுண்டி வகைகள், அப்பம், பால் தேநீர், Plain Tea உள்ளிட்டவற்றின் விலை அதிகரிப்படவில்லை என அவர் கூறினார்.

இதனிடையே, மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு இணையாக நேற்று முதல் தமது உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிறு தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது. 

Lunch sheet, உணவு பொதியிடும் கடதாசி ஆகியன 5 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், Shopping Bag
உள்ளிட்ட உற்பத்திகளை 15 முதல் 20 ரூபா வரை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிறு தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார தெரிவித்தார்.

இதனிடையே, அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்திற்கு ஏற்ப தகவல் தொடர்பாடல் சேவைகள், தொழில்துறை மற்றும் உற்பத்தி சேவைகளின் விலைகளை உயர்த்த நேற்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் Photo பிரதி ஒன்றின் விலையை 5 ரூபாவினால் அதிகரித்துள்ளது. அடையாள அட்டையின் பிரதி 10 ரூபாவில் இருந்து 15 ரூபாவாகவும், A- 4 பிரதியெடுத்தலுக்கான கட்டணம் 15 ரூபாவில் இருந்து 20 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சக்தி எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக நேற்று ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரகத்தை இன்று முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'என்னால் நாட்டிற்கு அபிவிருத்தி' அமைப்பின் தலைவர் சஞ்சய மஹாவத்த தலைமையில்  மின்சக்தி எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக நேற்று இந்த சத்தியாகிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.