நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணித்த டச்சு ஆய்வாளர்

துருக்கி - சிரியா நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணித்த டச்சு ஆய்வாளர்

by Bella Dalima 07-02-2023 | 4:10 PM

Colombo (News 1st) துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட  பயங்கர நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 5,000 ஆக அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்து அங்கு மூன்றாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக காத்திருக்கும் நிலையில், உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலை வேளையில், மக்கள் உறக்கத்தில் இருந்த போது நிலநடுக்கம் ஏற்பட்டதால், பலி எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால், உலகையே துயரத்தில் ஆழ்த்தியிருக்கும் இந்த துருக்கி - சிரியா நிலநடுக்கம் தொடர்பாக ஒருவர் முன்கூட்டியே கணித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளார். 

இந்த கொடுந்துயரம் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, Frank Hoogerbeets என்ற டச்சு விஞ்ஞானி, பெப்ரவரி 3ஆம் திகதியே இந்த அனர்த்தம் தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தென்-மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதிகளில் 7.5 ரிக்டர் அளவில் தற்போதோ அல்லது சில நாட்களிலோ நிலநடுக்கம் ஏற்படும் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். நிலநடுக்கத்தின் மையப்பகுதியின் வரைபடத்துடன் அவர் பதிவிட்டுள்ளார். 

அவரது ட்விட்டர் பக்கத்தில் அவரைப் பற்றிய தகவலில், நெதர்லாந்தில் உள்ள சூரிய முறையின் வடிவியல் ஆய்வு மையத்தில் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார். 

அது மட்டுமல்லாமல், குறித்த சூரிய முறையின் வடிவியல் ஆய்வு மையம், பெப்ரவரி 4 முதல்  6 ஆம் திகதி வரையில் நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இது ரிக்டர் அளவில் 6 புள்ளிகளை விடவும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ள தகவலையும் Frank Hoogerbeets மீள் பதிவிட்டுள்ளார்.  

இந்த ட்விட்டர் பதிவு, துருக்கி, சிரியாவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியான பிறகே வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.