யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவு தொடர்பான வர்த்தமானி வழக்கு ஒத்திவைப்பு

by Staff Writer 06-02-2023 | 5:38 PM

Colombo (News 1st) யாழ்.மாநகர சபை முதல்வராக இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டமையை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கு, யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 20ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் யாழ்.மாநகர சபையின் முதல்வராக இமானுவேல் ஆர்னோல்ட்  அறிவிக்கப்பட்டிருந்தார்.

யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது என கோரியும் அவரது பதவி நியமனம் மற்றும் வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரியும் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று(06) யாழ்.மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இரு தரப்புகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி வழக்கை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.