Colombo (News 1st) பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கான புதிய உறுப்பினராக டக்ளஸ் நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைய, அரசியலமைப்பு பேரவையினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய நியமனத்தின் ஊடாக ஆணைக்குழுவின் நிறைவுகாண் எண்ணிக்கை தொடர்பில் எவ்வித சிக்கல்களும் தோன்றாதென பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மொஹான் சமரநாயக்க மற்றும் உதேனி விக்ரமசிங்க ஆகியோர் நேற்று (03) இராஜினாமா செய்தனர்.
ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி அவர்கள் தமது இராஜினாமா விடயத்தை அறிவித்தனர்.
இதனிடையே, நாளாந்த மின்வெட்டுக்கு இதுவரை தாம் அனுமதி வழங்கவில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நேற்று முதல் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்தது.
இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.