பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்

by Bella Dalima 04-02-2023 | 4:55 PM

Colombo (News 1st) பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் தனது 78 ஆவது வயதில் காலமானார். 

அவர் தனது வீட்டில் தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக  தகவல் வெளியாகியுள்ளது.

வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம் 1974 ஆம் ஆண்டு வெளியான 'தீர்க்க சுமங்கலி' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். 

'வீட்டுக்கு வந்த மருமகள்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்' முதலான படங்களில் பாடியிருந்தாலும் 'தீர்க்கசுமங்கலி' படமே முதலில் வந்ததால், அதில் இடம்பெற்ற இவர் பாடிய பாடலே, முதல் பாடலானது.

 தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார். 

சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் பெற்றுள்ள வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. 

வாணி ஜெயராம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் இருந்து நிலை தடுமாறி கீழே தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்து ஆயிரம் விளக்கு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.