MTV Channel ஊடகவியலாளர்களின் மனுக்கள் பரிசீலனை

MTV Channel ஊடகவியலாளர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் பரிசீலனை

by Bella Dalima 31-01-2023 | 8:23 PM

Colombo (News 1st) கடந்த வருடம் ஜுலை மாதம் 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக MTV Channel தனியார் நிறுவனத்தின் எட்டு ஊடகவியலாளர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

தாக்குதலுக்கு இலக்கான சரசி பீரீஸ், வருண சம்பத், ஜனித்த மென்டிஸ், ஜூடின் சிந்துஜன், இமேஷ் சதர்லன்ட், W. வீரகோன், K. சந்திரன், லஹிரு மதுஷங்க ஆரச்சி ஆகிய ஊடகவியலாளர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனெக்க அளுவிஹாரே, S.துரைராஜா , மஹிந்த சமயவர்தன ஆகிய  நீதியரசர்கள் அடங்கிய குழாம் முன்னிலையில் குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்டன.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்கா டி சில்வாவின் ஆலோசனையின் பேரில், தாம் சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரானதாக அரச சட்டத்தரணி உயர் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

இதனை தவிர ஒன்று தொடக்கம் நான்காம் இலக்கம் வரையான பிரதிவாதிகள் சார்பிலும் தாம் ஆஜராவதாக அரச சட்டத்தரணி தெரிவித்தார்.

இந்த வழக்கில் ஒன்று தொடக்கம் நான்கு வரையான பிரதிவாதிகளாக, பொலிஸ்மா அதிபர் C.D.விக்ரமரத்ன, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட குறித்த பிரதிவாதிகள் சார்பில் அடிப்படை ஆட்சேபனைகளை தாக்கல் செய்துள்ளதாக அரச சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அடிப்படை உரிமை மனுக்களில் ஐந்தாவது பிரதிவாதியான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாம் ஜமால்தீன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா ஆஜராகின்றார்.

ஐந்தாவது பிரதிவாதி சார்பில் அடிப்படை ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதாக ஜனாதிபதி சட்டத்தரணி உயர் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

இதேவேளை, ஊடகவியலாளர்கள் 8 பேரும் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுக்களில், ஆறாவது ,ஏழாவது பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள, இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சார்பில் சட்டத்தரணி துஷித் ஜோன்தாஸன் ஆஜராவதுடன் அவர் திறந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்சேபனைகளை  மனுதாரர்களுக்கு இன்று வழங்கினார்.

ஒன்று தொடக்கம் ஐந்து வரையான பிரதிவாதிகள் தாக்கல் செய்துள்ள அடிப்படை ஆட்சேபனைகள் தொடர்பில் ஏற்கனவே தாம் எதிர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஏனைய பிரதிவாதிகள் தாக்கல் செய்துள்ள ஆட்சேபனைகள் தொடர்பிலும், எதிர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான உரிமையை ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா தக்கவைத்துக்கொண்டார்.

விடயங்களை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, குறித்த அடிப்படை உரிமை மனுக்களை ஜுலை மாதம் 26 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டத்தரணி சாரிக்க வனிகபதுகேவின் ஆலோசனையின் பேரில் மியுரு இகலஹேவா, N.K. அஷோக்பரன், தமித் கருணாரத்ன, நிரஞ்சன் அருள்பிரகாசம் ஆகிய சட்டத்தரணிகளுடன் ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா மனுதாரர்களான 8 ஊடகவியலாளர்கள் சார்பில் ஆஜராகியிருந்தார்.