வாக்காளர் ஒருவருக்கான செலவு 20 ரூபா

வாக்காளர் ஒருவருக்கு வேட்பாளர் செலவு செய்யக்கூடிய தொகை 20 ரூபாவாக அதிகரிப்பு

by Bella Dalima 27-01-2023 | 8:04 PM

Colombo (News 1st) தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தின் பிரகாரம், வேட்பாளரினால் ஒரு வாக்காளருக்காக செலவிடப்படும் தொகையை 20 ரூபாவாக அதிகரிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய தொகையை 15 ரூபாவாக அறிவிக்க ஆணைக்குழு அண்மையில் தீர்மானித்திருந்தது. எனினும், தற்போது அத்தொகை 20 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. 

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சீட்டு பணிகளுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. 

தேர்தல் இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களுக்கமைய தயாரிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். 

இதனிடையே, மாவட்ட மட்டங்களில் கிடைக்கப்பெற்றுள்ள வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்தார்.

வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான காகிதங்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள், அரச அச்சகத்தின் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.