மீட்டர் வட்டிக்கு பணம் பெற்றவர்கள் மீது கொடூர தாக்குதல்: 2 வருடங்களின் பின்னர் சந்தேகநபர் கைது

by Bella Dalima 27-01-2023 | 3:52 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்றுக்கொண்ட ஒருவர் தாக்கப்பட்டமையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் நேற்று (26) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 23 வயது மதிக்கத்தக்க விதுஷ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மீட்டர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்துச்சென்று கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

இதனையடுத்து, யாழ்ப்பாணம் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

குறித்த சம்பவம் கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் பொலிஸில் பதிவு செய்யப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையிலேயே சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டிருந்த காட்சியை அடிப்படையாகக் கொண்டு, சந்தேகநபரை கைது செய்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, கடந்த 24 ஆம் திகதி சுன்னாகம் பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட காங்கேசன்துறை வீதியில் வாகன விபத்தை ஏற்படுத்தி, வாள்வெட்டு தாக்குதல் நடத்திய கும்பலுக்கும் தற்போது கைதாகியுள்ள விதுஷ் என்பவருக்கும் இடையில் தொடர்புள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  காங்கேசன்துறை வீதியில் கப் ரக வாகனமும் சொகுசு கார் ஒன்றும் மோதி விபத்து இடம்பெற்றது.

இதனையடுத்து, சொகுசு காரில் வந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஐவர் காயமடைந்தனர்.

குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.