பஸ் சாரதி போத்தலால் தாக்கி நடத்துநர் பலி

பஸ் சாரதி போத்தலால் தாக்கி நடத்துநர் பலி

by Bella Dalima 24-01-2023 | 5:15 PM

Colombo (News 1st) பஸ் சாரதி ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் நடத்துநர் பலியாகியுள்ளார். 

குறித்த பஸ் சாரதியும் நடத்துநரும் மொனராகலையிலிருந்து கட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் பஸ்ஸில் பணியாற்றி வந்தனர். 

பஸ் நாளாந்தம் மொனராகலையிலிருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.30 அளவில் கட்டுநாயக்கவை சென்றடையும்.

இதன் பின்னர் மறுநாள் அதிகாலை மொனராகலை நோக்கி புறப்படும் வரை குறித்த பஸ் கட்டுநாயக்க விகாரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில், நேற்றிரவு பஸ்ஸை கட்டுநாயக்க விகாரையில்  நிறுத்தி வைத்துவிட்டு, இருவரும் மற்றொருவருடன் இணைந்து மதுபானம் அருந்தியுள்ளனர். 

இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்கள் மோதலாக வலுப்பெற்றுள்ளது. சாரதி போத்தலால் நடத்துநரை தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான 38 வயதான நடத்துநர் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துவிட்டு, நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நடத்துநர், இன்று அதிகாலை உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.

தாக்குதலை மேற்கொண்ட 36 வயதான பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்