இலங்கை பெற்றுக்கொண்ட கடனை 2 வருடங்களுக்கு இடைநிறுத்துவதாக சீனா உறுதிமொழி

by Staff Writer 22-01-2023 | 9:39 PM

Colombo (News 1st) மக்கள் தொடர்பில் சிந்திக்காமல் எடுக்கப்பட்ட தீர்மானங்களால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வீழ்ச்சியடைந்த நாடு இன்று பூகோள அரசியல் பொறிக்குள் சிக்கி வருவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமையை சுட்டிக்காட்டி வேறு நாடுகளில் உதவிகளை கேட்க வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் சீனாவிடம் இலங்கை கோரிய கடன் நிவாரண உத்தரவாதத்திற்கு சீனா நேற்று(21) பதிலளித்துள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

இலங்கை தமது நாட்டிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ள கடனை மீளச் செலுத்துவதற்காக 02 வருட நிவாரண காலத்தை வழங்குவதை குறுகிய கால தீர்வாக முன்மொழிவதாகவும் இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள ஏனைய தரப்பினர் குறுகிய கால மற்றும் நீண்ட கால உத்தரவாதங்களை வழங்க வேண்டும் எனவும் சீனா தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டினை முன்னோக்கி இட்டுச்செல்லுமாறு சீனா, சர்வதேச நாணய நிதியத்தை கோரியுள்ளது.

இதேவேளை, இந்திய வெறியுறவுத்துறை அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கரின் இலங்கை விஜயத்தின் போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு இந்தியா உறுதிமொழி வழங்கியது.