இலங்கை மீண்டெழ வழிசமைக்க வேண்டும் - எஸ்.ஜெய்சங்கர்

இலங்கை மீண்டெழுவதற்கு கடன் வழங்குநர்கள் வழிசமைக்க வேண்டும் - இந்திய வௌிவிவகார அமைச்சர்

by Rajalingam Thrisanno 20-01-2023 | 12:29 PM

இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ், ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி ஆகியோர் கூட்டு ஊடக சந்திப்பில் இன்று(20) கலந்துகொண்டனர்.

இந்த ஊடக சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பிரசன்னமாகியிருந்தார்.

இலங்கையுடனான ஒற்றுமையை வௌிப்படுத்துவதே தமது இந்த விஜயத்தின் பிரதான நோக்கமென கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.

வௌிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி உள்ளிட்ட அமைச்சர்களை நேற்று(19) மாலை சந்தித்த இந்திய வௌிவிவகார அமைச்சர் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டுள்ளார். 

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து கட்டியெழுப்புவதற்காக  4 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை இந்தியா கடந்த ஆண்டு வழங்கியிருந்ததாகவும் இந்திய வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார். 

பக்கத்து நாட்டுக்கு முன்னுரிமையளிப்பதாகவும் இந்தியாவின் பங்காளி நாட்டுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் இந்தச் சந்திப்பின் போது உறுதியளித்தார்.

இலங்கையின் அபிவிருத்தி தொடர்பாக இந்த வருடம் அவதானம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

செயல்திறன்மிகு படிமுறைகளை முன்னெடுத்து இலங்கை மீண்டெழுவதற்கு கடன் வழங்குநர்கள் வழிசமைக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் தாம் உள்ளதாகவும் இந்திய வௌிவிவகார அமைச்சர் வலியுறுத்தினார்.

ஏனையோருக்காக காத்திருக்காது கடன்மறுசீரமைப்புக்கான உறுதிப்பாட்டை சர்வதேச நாணயநிதியத்திற்கு வழங்குவதன் ஊடாக இலங்கையை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கான வழியை உருவாக்கிக் கொடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

இலங்கையின் உறுதிப்பாட்டை பேணுவது மாத்திரமல்லாது கடன் வழங்குநர்களையும் சமமாக கையாள்வது இந்தியாவின் நோக்கமாகுமென இந்த ஊடகசந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. 

சிறந்த முதலீடுகளின் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப வேண்டுமெனவும் இலங்கையில் முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களுக்கு இந்தியா அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறினார்.

கடன் மறுசீரமைப்பிற்கான உத்தரவாதத்தை தாமதமின்றி  வழங்குவதாகவும் இதனை சர்வதேச  நாணய நிதியத்திற்கு அறிவிப்பதாகவும் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.