இந்திய வௌிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கர் இலங்கை வருகை

by Bella Dalima 19-01-2023 | 4:04 PM

Colombo (News 1st) இந்திய வௌிவிவகார அமைச்சர்  கலாநிதி S.ஜெய்சங்கர், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு இன்று (19)  வருகை தந்துள்ளார். 

இந்திய வௌிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் நால்வரும் அவருடன் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக கட்டுநாயக்க  சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.

இந்தியாவிற்கு சொந்தமான விசேட விமானத்தில், இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்த குழுவினரை வரவேற்பதற்காக இலங்கை வௌிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று விமான நிலையத்திற்கு சென்றிருந்தது. 

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் முன்னதாக 2021 ஜனவரியிலும் 2022 மார்ச்சிலும் இலங்கைக்கு விஜயங்களை மேற்கொண்டிருந்தார். 

அவர் இலங்கைக்கான தற்போதைய விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் பிரதமர்  தினேஷ் குணவர்தனவையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். 

 

 

கலாநிதி எஸ். ஜெய்சங்கர்  இலங்கையின் வௌியுறவுத்துறை அமைச்சர்  M.U.M.அலி சப்ரியையும் சந்தித்து, இலங்கை - இந்தியா இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.