உலகின் மிகவும் வயதான நபர் இயற்கை எய்தினார்

உலகின் மிகவும் வயதான நபரான அருட்சகோதரி லூசில் ராண்டன் 118 ஆவது வயதில் இயற்கை எய்தினார்

by Staff Writer 18-01-2023 | 10:40 AM

Colombo (News 1st) உலகின் அதிக வயதான நபரான பிரெஞ்ச் அருட்சகோதரி ஆண்ட்ரே தமது 118 ஆவது வயதில் நேற்று (17) இயற்கை எய்தினார்.

அருட்சகோதரி ஆண்ட்ரே என அழைக்கப்படும் லூசில் ராண்டன் (Lucile Randon) 1944 ஆம் ஆண்டு கன்னியாஸ்திரியாக இணைந்த போது ''அருட்சகோதரி ஆண்ட்ரே'' என்ற பெயரை பெற்றார்.

1904 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி பிறந்த சகோதரி ஆண்ட்ரே, GRG (World Supercentenarian Rankings List) தர வரிசைப்படி உலகின் அதிக வயதானவராக பதிவாகியிருந்தார்.

ஐரோப்பாவில் மிகவும் வயதான நபராக நீண்டகாலமாக அங்கீகரிக்கப்பட்ட அவர், கடந்த ஆண்டு 119 வயதில் ஜப்பானின் கேன் தனகா இறந்ததைத் தொடர்ந்து உலகின் வயதானவர் ஆனார். ஏப்ரல் 2022 இல் அவரது நிலையை கின்னஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.

Protestant குடும்பத்தில் பிறந்த அருட்சகோதரி ஆண்ட்ரே, தனது 26 ஆவது வயதில் கத்தோலிக்கராக மாறினார். 41 வயதில்  Daughters of Charity சபையில் கன்னியாஸ்திரியாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

அருட்சகோதரி ஆண்ட்ரே ஆசிரியராகவும் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போரின் பெரும் பகுதியில் குழந்தைகளை கவனித்துக்கொண்டார். போர் முடிந்த பிறகு ஒரு மருத்துவமனையில் பணியாற்றிய அவர் 28 ஆண்டுகள் அனாதைகள் மற்றும் முதியவர்களுக்கு ஆதரவாக இருந்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு  வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில்,

"நான் எப்படி இவ்வளவு காலம் வாழ்ந்தேன் என்று தெரியவில்லை. இரகசியம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. அந்த கேள்விக்கு கடவுளால் மட்டுமே பதில் அளிக்க முடியும்"

என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், டூலோனில் உள்ள முதியோர் இல்லத்தில் அருட்சகோதரியின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது.

அருட்சகோதரி ஆண்ட்ரேக்கு முன்னதாக, தென் பிரான்ஸின் ஆர்லஸில் 1997 ஆம் ஆண்டு, தனது 122 ஆவது வயதில் உயிரிழந்த Jeanne Calment என்பவரே இதுவரை உலகில் எந்தவொரு மனிதரும் எட்டாத, உறுதிப்படுத்தப்பட்ட வயதை அடைந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.