இந்தியாவையும் பொருளாதார பெருமந்தம் தாக்கும்

ஜூன் மாதத்தில் இந்தியாவையும் பொருளாதார பெருமந்தம் தாக்கும்: முதன்முறையாக ஒப்புக்கொண்ட மத்திய அரசு

by Bella Dalima 17-01-2023 | 4:40 PM

India: உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி இந்தியாவையும் தாக்கக் கூடும் என இந்திய மத்திய அரசு முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. 

நாக்பூரில் ஆரம்பமாகியுள்ள G20 நாடுகளின் உட்கட்டமைப்பு பணிக்குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே அதனை உறுதிப்படுத்தியுள்ளார். 

நகரங்களை பொருளாதார வளர்ச்சி மையங்களாக மாற்றுதல், நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கு நிதியளித்தல் மற்றும் எதிர்காலத்தை தயார்படுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகின்றன. 

மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். 

இதன்போது, தற்போது வளர்ந்த நாடுகள் பலவும் பொருளாதார பெருமந்தத்தை எதிர்கொண்டுள்ளன என்பதே உண்மை. இந்தியாவையும் வரும் ஜூனுக்கு பிறகு பொருளாதார பெருமந்தம் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டு மக்களை பாதிக்காத வகையில் தடுக்க மத்திய அரசும், பிரதமர் மோடியும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், என நாராயண் ரானே தெரிவித்தார். 

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை பொருளாதார பெருமந்தம் அச்சுறுத்தும் நிலையில், இந்தியாவை அது தாக்க வாய்ப்பே இல்லையென இதற்கு முன்னர் பல தடவைகள் இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புள்ளிவிபரங்களுடன் எடுத்துரைத்து வந்தார். 

இந்த நிலையிலேயே பொருளாதார பெருமந்த நிலை எதிர்வரும் காலத்தில் இந்தியாவிலும் ஏற்படுமென மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்றுறை அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்துள்ளார்.