பண்டோரா பேப்பர்ஸ் விவகாரம்: இந்தியாவுடன் தகவல்களை பகிர தயாராகவுள்ளதாக பனாமா அறிவிப்பு

by Bella Dalima 14-01-2023 | 5:34 PM

Colombo (News 1st) பண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) தொடர்பில் தேவையான தகவல்களை இந்தியாவுடன் பகிர தமது அரசாங்கம் தயார் என பனாமா வௌிவிவகார அமைச்சர் Janaina Tewaney தெரிவித்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்களில், இந்தியாவின் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர் விநோத் அதானி உட்பட 500 பிரபலங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இவர்கள் 20,​000 கோடி இந்திய ரூபா அளவில்  கணக்கில் வராத சொத்துகளைக் கொண்டிருப்பதாக இந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.

இது தொடர்பிலான வழக்கு இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், பண்டோரா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பாக தேவையான தகவலை இந்தியாவுடன் பகிர பனாமா அரசு தயாராக உள்ளதாக பனாமா வௌிவிவகார அமைச்சர்  Janaina Tewaney கூறியுள்ளார்.

பனாமா நிதி கட்டமைப்பில் தற்போது வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கறுப்பு பணத்தை ஒழிக்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது எனவும் பனாமா வௌிவிவகார அமைச்சர் கூறியதாக The Hindu செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டொலர் நெருக்கடியினால் நாட்டு மக்கள் பெரும் துயரங்களை எதிர்நோக்கும் போது, பண்டோரா ஆவணத்தின் மூலம் வௌிப்படுத்தப்பட்ட, முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் கணவரது 160 மில்லியன் டொலருக்கும் அதிகமான கொடுக்கல் வாங்கலுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை வௌிப்படுத்தப்படவில்லை.

இது தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடந்த வருடம் ஒக்டோபர் 6 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி இலஞ்ச விசாரணை ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.

தற்போது பல மாதங்கள் ஆகிவிட்டன. அந்த அறிக்கை தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை.