அரசியல் கைதிகளை விடுவிக்கும் அமெரிக்காவின் திட்டம்

அரசியல் கைதிகளை விடுவிக்கும் வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்கா

by Bella Dalima 13-01-2023 | 8:29 PM

America: நியாயமற்ற முறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான புதிய அரசியல் அபிவிருத்தி வேலைத் திட்டத்தை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு அமைய, உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் பேச்சு சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம் காணப்படுவதுடன் அந்த உரிமைகளுக்கு எவராலும் அச்சுறுத்தல் விடுக்க முடியாது என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அரசியல் கைதிகளை விடுவிக்கும் இந்த திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு உலக மக்களை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

உலகிலுள்ள சில நாடுகள் சட்டத்தை முரணாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிரான தரப்பினரை ஒடுக்குவதற்கும் அவர்களை பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிக்க முயற்சிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

இதேவேளை,  யுத்த குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிச் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

இதனூடாக யுத்த குற்றங்கள் தொடர்பில் உலகிலுள்ள எந்தவொரு நாட்டின் பிரஜைக்கும் அமெரிக்க மண்ணில் வழக்கு தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் அதிகாரம் அமெரிக்க நீதிமன்ற திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், வெளிநாடுகளில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுடன் தொடர்புடைய தரப்பினர் அமெரிக்காவிற்குள் நுழைவதும் கடுமையாக கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.