நெற்செய்கையில் நோய் பரவல்: பெரும்போகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம்

by Staff Writer 12-01-2023 | 8:24 PM

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் அவரது அரசாங்கம் இரசாயன உரத்தை தடை செய்வதற்கு திடீரென  மேற்கொண்ட தீர்மானத்தால் இரண்டு போகங்களில் அறுவடையை இழந்த விவசாயிகள் இம்முறை பெரும்போகத்திலும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

நெற்செய்கையில் பரவி வருகின்ற மஞ்சள் எரிநோய் தாக்கமே அதற்கு காரணமாகும்.

தரமற்ற உரம் மற்றும் தேவையான அளவு உரம் விவசாயிகளுக்கு கிடைக்காமையே இந்த நிலைமை ஏற்படக் காரணம் என விவசாய திணைக்களம் கூறியுள்ளது. 

நாட்டின் பல பகுதிகளில் நெற்செய்கையில் மஞ்சள் எரிநோய் பரவி வருகின்றது.

இதனால் நெற்செய்கை மஞ்சள் நிறமாக மாறியுள்ளதுடன், அறுவடையும் வெகுவாக குறைவடைந்துள்ளது.

இதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். 

விவசாய துறைசார் நிபுணர்கள் மற்றும் விசாயிகள் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்த நிலையில், ஒரே இரவில் இரசாயன உரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

தற்போது விவசாய செய்கையில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை மேலும் மோசமடைய சந்தர்ப்பமளிக்க முடியமா?

உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பெரும்போகத்தில் விவசாயிகள் மேலும் நெருக்கடியை சந்திக்க நேரிடும்.