கடும் நிதி நெருக்கடியில் திறைசேரி?

கடும் நிதி நெருக்கடியில் திறைசேரி: ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவிப்பு

by Bella Dalima 10-01-2023 | 7:40 PM

Colombo (News 1st) திறைசேரி தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

இதனால் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவதில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை கூறினார்.

2023 ஆம் ஆண்டு எதிர்பார்த்ததை விட மிக மோசமான  நிதி நெருக்கடியை திறைசேரி எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். 

பொருளாதார நெருக்கடியால் 2022 ஆம் ஆண்டு வரிகள் ஊடாக அறிவிடப்பட்ட நிதி குறைவடைந்துள்ளதாகவும் ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதங்களில் வரிகளூடாக அரசாங்கத்திற்கான நிதி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்தாலும், அத்தியாவசிய செலவுகளைக் கட்டாயம் கவனிக்க வேண்டிய தேவையுள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். 

அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியக் கொடுப்பனவு, அரச கடனுக்கான வட்டி, நலன்புரி செலவுகள் உள்ளிட்ட நாளாந்த செலவுகளுக்கு தேவையான பணம் திறைசேரியிடம் இல்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

எனினும், அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அல்லது நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசின் வருமானம் , அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நலத்திட்ட உதவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில திட்டங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்துவதற்கான திட்டம் தொடர்பில் தற்போது சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் கலந்துரையாடப்பட்டு வருவதாக  ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எவ்வாறாயினும், ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வதற்கு சென்ற சிலர் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

ஓய்வூதியக் கொடுப்பனவு சில வங்கிகளுக்கு கிடைக்காமையினால் அவ்வாறான நிலைமை ஏற்பட்டது.