.webp)
Colombo (News 1st) முட்டைக்கு நிர்ணய விலை அறிவித்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வௌியிடப்பட்ட வர்த்தமானிக்கான இடைக்கால தடையுத்தரவை வழக்கு நிறைவடையும் வரை அமுல்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முட்டைக்கான நிர்ணய விலைக்கு எதிராக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 42 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளது.
எனினும், இந்த நிர்ணய விலையை ஏற்க முடியாது என மனுதாரர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, குறித்த மனுவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
நீதிபதிகளான பிரசன்ன டி சில்வா மற்றும் ஹேமா ஸ்வர்ணாதிபதி ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.