.webp)
Colombo (News 1st) நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்புவதற்கு முன்னோடியாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா கடந்த மாதம் 16 ஆம் திகதி அனுப்பிய ஓரியன் ( Orion) விண்கலம் வெற்றிகரமாக மீண்டும் பூமிக்குத் திரும்பியுள்ளது.
மெக்சிக்கோ அருகே பசுபிக் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இறங்கிய அந்த விண்கலம், ஒலியின் வேகத்தைப் போல் 32 மடங்கு வேகத்தில் வளிமண்டலத்திற்குள் நுழைந்து, 5,000 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பல்லோ விண்கலத் திட்டங்கள் நிறுத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக நிலவுக்கு மனிதா்களை அனுப்புவதற்காக Artemis 1 என்ற இந்த திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது.
அதற்கு முன்னோட்டமாக, சோதனை முறையில் 3 மனித மாதிரிகளுடன் Orion விண்கலம் கடந்த மாதம் ஏவப்பட்டது. அதற்கு முன்னா் இயந்திரக் கோளாறு காரணமாக அந்த திட்டம் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் ராக்கெட் மூலம் ஏவப்பட்ட Orion விண்கலம் நிலவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது. 6 நாட்கள் பயணத்திற்கு பின் Orion விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.
சுமார் 26 நாட்கள் நிலவின் சுற்றுவப்பட்டப்பாதையில் சுற்றி வந்த Orion விண்கலம் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் பூமிக்கு புறப்பட்டது.
பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த விண்கலம் பசுபிக் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பாக இறங்கியது.