உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

by Staff Writer 09-12-2022 | 6:09 PM

Colombo (News 1st) உள்நாட்டு இறைவரி (திருத்த) சட்டமூலம்  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

சட்டமூலத்திற்கு ஆதரவாக  79 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.  

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துள்ள அலி சப்ரி ரஹீம், A.L.M. அதாவுல்லாஹ் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, உத்தர லங்கா மகா சபை மற்றும் சுதந்திர மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் உறுப்பினர்கள் சட்டமூலத்திற்கு  எதிராக வாக்களித்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு , இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் வாக்களிப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான மாதாந்த வருமானத்திற்கு 6 முதல் 36 வீதம் வரி விதிக்க அனுமதி கிடைத்துள்ளது. 

புதிய திருத்தங்கள் மூலம் ஒரு இலட்சம் ரூபா வரையிலான மாதாந்த வருமானத்திற்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒரு இலட்சத்தை தாண்டும் வருமானத்தை பெறுவோரிடம் 6 முதல் 36 வீதம் வரையில் 6 கட்டங்களில் வரியை அறிவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, ஒரு மாதத்திற்கு 3,50,000 ரூபா வருமானம் பெறும் ஒருவர் குறித்த ஆறு வரி முறைகளின் கீழ் மாதாந்தம் 52,500 ரூபாவை வரியாக செலுத்த வேண்டும்.

இதேவேளை, பெறுமதி சேர்க்கப்பட்ட வரித்திருந்த சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 82 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.