இறுதி நாளில் பல தேசிய சாதனைகள்

மெய்வல்லுநர் போட்டிகளின் இறுதி நாளில் பல தேசிய சாதனைகள்

by Staff Writer 06-12-2022 | 8:50 PM

Colombo (News 1st) அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டிகளின் இறுதி நாளான இன்று பல தேசிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. 

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றன.

போட்டியின் இறுதி நாளான இன்று யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் எஸ்.மிதுன்ராஜ் புதிய போட்டி சாதனை ஒன்றை படைத்தார். 

20 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான பரிதி வட்டம் எறிதல் போட்டியில் 45.47 மீட்டர் தூரத்திற்கு எறிந்து அவர் திறமையை வெளிப்படுத்தினார். 

மாத்தறை ராகுல கல்லூரியின் உஷார சந்தீப இரண்டாமிடத்தையும் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையின் ப்ரேல் பிலிப்ஸ் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

இதேவேளை, ஆடவருக்கான குண்டெறிதல் போட்டியிலும் எஸ்.மிதுன்ராஜ் மூன்றாமிடத்தைப் பிடித்தார்.

இந்த போட்டியில் மிதுன்ராஜ் 14.49 மீட்டர் தூரத்திற்கு குண்டை எறிந்தார்.

இதேவேளை, ஆடவருக்கான 5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் கிளிநொச்சி - முழங்காவில் மத்திய மகா வித்தியாலயத்தின் சுமன் கிரன் முதலிடத்தை பிடித்தார். 

18 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில், யாழ்ப்பாணம் - மஹாஜனா கல்லூரியின் சிவபாதம் சுவர்ணா தங்கப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.

போட்டியில், அவர் 3.20 உயரத்திற்கு பாய்ந்து திறமையை வௌிப்படுத்தினார்.