நிவாரண நிதி வசதிகளை பெற இலங்கைக்கு அங்கீகாரம்

சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் நிவாரண நிதி வசதிகளை பெற இலங்கைக்கு அங்கீகாரம்

by Bella Dalima 06-12-2022 | 7:21 PM

Colombo (News 1st) பொருளாதாரத்தை நிலையாக பேணுவதற்கும் வாழ்க்கைத் தரத்தினை பாதுகாப்பதற்கும் உதவி செய்வது தொடர்பில் சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் நிவாரண  நிதி வசதிகளை பெறுவதற்கான இலங்கையின்  தகுதியை  உலக வங்கி அங்கீகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.

நாட்டிற்கு வருகை தந்துள்ள உலக வங்கியின் உப தலைவர்  மார்ட்டின் ரைசர் (Martin Raiser) உள்ளிட்ட கடன் வழங்கும் தரப்பினருடன் இன்று   ஜனாதிபதி  கொழும்பில் நீண்ட  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பலதரப்பு நிதி நிறுவனங்களின் ஆதரவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட உதவித் திட்டம் இலங்கைக்கு தேவை என இதன்போது  தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு, தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது ''நிதி மற்றும் பொருளாதாரத்தினை சிறந்த நிலைக்கு கொண்டு வருதல், வளர்ச்சியை  உள்ளடக்கிய  நீண்ட கால அபிவிருத்தி '' என்ற திட்டத்தினை கடன் வழங்கும் பிரதிநிதிகளிடம் முன்வைத்தார்.

இந்த கலந்துரையாடலில், உலக வங்கியின் உப தலைவர் மார்ட்டின்  ரைசர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் Shixin Chen, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் Peter Breuer, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி கலாநிதி உர்ஜித் பட்டேல் (Urjit Patel) உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.