தம்பதி கொலை: குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை

வவுனியாவில் தம்பதி கொலை: குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை

by Bella Dalima 02-12-2022 | 4:41 PM

Colombo (News 1st) வவுனியா - ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கணவனையும் மனைவியையும் வெட்டிக் கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட தம்பதியினரின் தங்க நகைகளை திருடியமை தொடர்பில் குற்றவாளிக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில், குறித்த வழக்கு தீர்ப்பிற்கு அழைக்கப்பட்டது. குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளதால், அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது. 

கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இரண்டாவது பிரதிவாதி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பன்றிக்கெய்தகுளத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி கணவனும் மனைவியும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கொலை செய்யப்பட்டவரின் தொலைபேசிக்கு இறுதியாக மேற்கொள்ளப்பட்ட அழைப்பை அடிப்படையாகக் கொண்டு, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தொடர் விசாரணைகளின் பின்னர் முதலாவது சந்தேகநபரே கொலைக் குற்றவாளி என சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது.