மனதில் நினைக்கும் வேலையை கணினி செய்யும்!

மனித மூளைக்குள் Chip:மனதில் நினைக்கும் வேலையை கணினி செய்யும் - எலான் மஸ்க்கின் புதிய திட்டம்

by Bella Dalima 02-12-2022 | 3:32 PM

Colombo (News 1st) மனித மூளைக்குள் சிப் (Brain Chip) ஒன்றை பொருத்தி மனிதர்கள் மத்தியில் சோதனை செய்ய உள்ளதாக எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார். 

மூளைக்குள் சிப்பை பொருத்தி, அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் வகையில் இந்த பரிசோதனையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாகவும் அந்த சிப்களில் ஒன்றை தானே செலுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார். 

இந்த சோதனை தற்போது குரங்குகளிடம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் மனிதர்கள் மத்தியில் சோதனை செய்யப்படவுள்ளது. இதன் மூலம், மனதில் நினைப்பதை கணினி மூலம் செயற்படுத்த முடியும். 

இந்த பரிசோதனை முயற்சிக்கு தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, தங்களை அனுமதிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக மஸ்க் கூறியுள்ளார்.

எலான் மஸ்கின் Start up நிறுவனமான  Neuralink இதனை மேற்கொள்கிறது. இன்னும் 6 மாதங்களில் மனிதர்களிடம் Neuralink சோதனையை தொடங்கும். 

இந்த சிப் ஒரு சிறிய நாணயத்தின் அளவில் இருக்கிறது. Neuralink 2021ஆம் ஆண்டில் ஒரு வீடியோவை வெளியிட்டது, அதில் ஒரு குரங்கு தனது மூளையில் பொருத்திய சிப்பை பயன்படுத்தி Video Game விளையாடுவதைக் காண முடிந்தது. இந்த சிப் மூலம் மனிதர்கள் இழந்த பார்வையை பெற முடியும். முதுகுத் தண்டு எலும்பு முறிவு அல்லது பக்கவாதத்தால் முற்றிலுமாக ஊனமுற்றவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதிலும் Neuralink-இன் தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும். 

மூளையில் எந்த நியூரான் செயலிழந்ததோ அதனை இந்த சிப் மூலம் தூண்டிவிட்டு வேலை செய்யவைக்க முடியும் என  கூறுகின்றனர். 

Neuralink நிறுவனத்தின் இந்த சோதனை வெற்றியடைந்தால், சிப் உதவியுடன் கணினியைக் கட்டுப்படுத்த முடியும். சிப் பொருத்தப்பட்டவரின் மனதில் நினைக்கும் வேலையை கணினி செய்யும்.