Colombo (News 1st) முல்லைத்தீவு - உடையார்கட்டு குரவில் கிராமத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள், முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் மனித எச்சங்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக பொலிஸார் கூறினர்.
நகர்த்தல் பத்திரத்தினூடாக நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, மனித எச்சங்கள் தொடர்பான தடயவியல் சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று(30) மாலை மீட்கப்பட்ட மனித எச்சங்கள் சுமார் 20 வருடங்களுக்கு முந்தையதாக இருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக பொலிஸார் கூறினர்.
உடையார்கட்டு - குரவில் பகுதியில் தனியார் காணியொன்றில் கடந்த 20ஆம் திகதி மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதற்கு அமைய, மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் நேற்று(30) மாலை குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.