அம்பிட்டியவில் மாணவருக்கு தீ வைத்த கும்பலை பிடிக்க ஒரு மாத கால அவகாசம் கோரியுள்ள பொலிஸார்

by Bella Dalima 01-12-2022 | 8:30 PM

Colombo (News 1st) இந்த வருடம் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற பாடசாலை மாணவர் ஒருவர் அடித்து, எரியூட்டப்பட்ட செய்தி ஒன்று கடந்த நவம்பர் 27 ஆம் திகதி பதிவானது.

குறித்த மாணவர் தனது தந்தையுடன் அத்தையின் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றது. 

அம்பிட்டிய பகுதியில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கும்பல் ஒன்றே இந்த குற்றச் செயலை செய்துள்ளது.   

அந்த கும்பலை அடக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லையென பொலிஸார் மீது மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ள நிலையில், பொலிஸார் அம்பிட்டிய மீகணுவ பிரதேசத்தின் 7 பிரதேச செயலகங்களை சேர்ந்த மக்களை இன்று  கலந்துரையாட அழைத்திருந்தனர்.

கண்டி பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமல் ரத்நாயக்க தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஒரு மாதத்திற்குள் பிரச்சினையை நிவர்த்திப்பதாக பொலிஸார் வழங்கிய உறுதிமொழியை அடுத்து, கலந்துரையாடல் நிறைவு பெற்றது.

எரிகாயங்களுக்குள்ளான பாடசாலை மாணவர், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று, தற்போது சாதாரண சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.