48,500 ஆண்டுகளுக்கு பின் உயிர் பெற்ற Zombie வைரஸ்

48,500 ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெற்ற கொடிய சோம்பி வைரஸ்; மனித குலத்திற்கு பேராபத்தா?

by Bella Dalima 30-11-2022 | 3:38 PM

Russia: ரஷ்யாவில் இதுவரை உறைந்த நிலையில் இருந்த ஏரியின் அடியில் புதைந்திருந்த 48,500 ஆண்டுகள் பழமையான சோம்பி வைரஸை (Zombie Virus) பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

இதனால், மேலும் ஒரு பேரழிவான பெருந்தொற்று குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. 
 
புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம் காரணமாக பல ஆயிரம் ஆண்டுகளாக நிரந்தரமாக உறைந்திருந்த இந்த ஏரி உருகியுள்ள நிலையில், இதில் புதிய வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

பருவநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் வேகமாக உருகும் நிலையில், இதுபோன்ற வைரஸ் தொற்று பரவினால், ஆபத்து அதிகம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சைபீரியாவில் உள்ள நிரந்தர உறைபனி (permafrost) பகுதியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பிரான்ஸ்  ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் 13 வகை வைரஸ்களுக்கு புத்துயிர் அளித்துள்ளனர். அதில் ஒரு வைரஸ் சுமார் 48,500 ஆண்டுகளாகப் புதைந்திருந்த "சோம்பி வைரஸ்கள்" என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

அவை அனைத்தும் ஐந்து வெவ்வேறு இனங்களை சேர்ந்தவை எனவும் அவைகளின் பெயர் Megavirus Mammoth எனவும், இந்த வைரஸ்கள் யானைகளின் மூதாதையர்களான Mammoth-கள் சைபீரியாவில் சுற்றித் திரிந்த காலத்தைச் சேர்ந்தவை எனவும் பனிக்காலத்தில் பல வைரஸ்கள் சைபீரியாவின் permafrost பனியில் புதையுண்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த வைரஸ்கள் ஒரு மில்லியன் ஆண்டுகள் வரை உறைந்திருக்கும் கரிமப் பொருட்களை வெளியிடும் விளைவைக் கொண்டுள்ளதாகவும் ஒருவேளை அதில் கொடிய கிருமிகளும் இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

இவை பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த நிலையில் இருந்த போதிலும், இன்னும் கூட மனிதர்களைத் தாக்கும் குணத்தைக் கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

அதனால்தான் ரஷியா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த வைரஸ்களை முன்கூட்டியே கண்டுபிடித்து ஆய்வு செய்ய விரும்புவதாகவும் இதன் மூலம் அவற்றின் தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கான வழியைக் கண்டறிய முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவை பெரும்பாலும் அமீபா நுண்ணுரியிகளை பாதிக்கும் திறன் கொண்டவையே. இவை மனிதர்களை தாக்கும் ஆபத்து மிகவும் குறைவு எனவும், எதிர்காலத்தில் கொரோனா நோய்த்தொற்று போன்று பொதுவானதாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பனிப்பாறைகள் உருகுபோது இதுபோன்ற பழமையான வைரஸ்கள் வெளிப்பட்டாலும் வெளிப்புற சூழலில் எவ்வளவு காலம் தொற்றாக இருக்கும் என்பதும், தனக்கு பொருத்தமான ஒரு உயிர் மீது எப்படி இது தாக்கம் செலுத்தும் என்பதை மதிப்பிடுவதும் சாத்தியம் இல்லாதது.