உயர் நீதிமன்றம் பொலிஸாருக்கு விடுத்துள்ள உத்தரவு

முறைப்பாடுகளை விசாரிக்கும் போது பின்பற்ற வேண்டிய முறைமையொன்றை தயாரிக்குமாறு உயர் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு

by Staff Writer 26-11-2022 | 8:03 PM

Colombo (News 1st) பொலிஸ் அதிகாரிகள் முறைப்பாடுகளை விசாரிக்கும் போது பின்பற்றும் முறைமை ஒன்றை அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி ஒருவர் தமது சேவை வழங்குநர் சார்பில் ஆஜராவதற்கு சென்றிருந்த போது, அவருக்கு அச்சுறுத்தல் விடுத்து அவரின் சேவை வழங்குநர் சார்பில் ஆஜராக இடமளிக்காமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு ஒன்று தொடர்பில் இடைக்கால உத்தரவினை பிறப்பிக்கும் வகையில் உயர் நீதிமன்றம்  இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

முறைப்பாட்டாளர் கூறும் விதத்தில், குறித்த முறைப்பாடு பொலிஸாரினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் K.S.K. ரூபசிங்க அவரை அவ்விடத்தில் இருந்து  வௌியேறுமாறு கட்டளையிட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

அந்த கட்டளையை நிராகரித்த மனுதாரர், தமது சேவை வழங்குநர் சார்பில் ஆஜராவதற்கு தமக்கு உரிமை உள்ளதாக அந்த பொலிஸ் அதிகாரிக்கு கூறியுள்ளார்.

அதன் போது, அவருக்கு அச்சுறுத்தல் விடுத்து அவரை கைது செய்வதாக தெரிவித்துள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் , பொலிஸ் நிலையத்தில் இருந்த ஏனைய அதிகாரிகளுக்கு அவரின் தொலைபேசியை பொறுப்பேற்குமாறு அறிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது, தொலைபேசியில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட குரல் பதிவினை அடிப்படையாக வைத்து பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வாக்குவாதத்தின் பிரதியை மனுதாரர் முன்வைத்திருந்தார்.

முறைப்பாட்டினை விசாரணை செய்யும் போது, பொலிஸார் பின்பற்ற வேண்டிய உரிய முறைமை ஒன்றை அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அந்த முறைமையின் கீழ் முறைப்பாடு தொடர்பில் அழைக்கப்படும் அனைத்து தரப்பினருக்கும் சட்ட ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்கான உரிமையும் சட்டத்தரணிகளுக்கு தமது சேவை வழங்குநர்கள் சார்பில் விடயங்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பமும் வழங்கப்பட வேண்டும் எனவும்  உயர் நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்தது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  K.S.K.ரூபசிங்கவுடன் தொடர்புடைய இந்த சம்பவம் குறித்து பக்கசார்பற்ற விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.